விண்வெளித்துறையில் சாதனை படைக்க முட்டிமோதும் உலக நாடுகளின் கவனத்தை, சந்திரயான் 3-ன் மூலம் வலிமையான இந்தியா இன்று தன்வசம் ஈர்த்துள்ளது. இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயானின் உருவாக்கத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக தமிழர்கள் இருந்துள்ளனர். அவ்வாறான சந்திரயான் தமிழர்கள் பற்றி விரிவாகக் காணலாம்….
சந்திரயான் 1 : மயில்சாமி அண்ணாதுரை
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய விண்வெளிப் பயணத்தின் உச்சமாக கருதப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட தொலைதூரத்தில் இருக்கும் நிலவை விண்கலத்தின் வாயிலாக அங்குலம் அங்குலமாக ஆய்வுக்கு உட்படுத்தும் அறிவியல் திறனை இந்தியா பெற்றிருந்தனை உலகே உணரும் நாளாக சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள் அமைந்தது.
இத்தகையை பெருமையை இந்தியா படைக்க காரணமாக இருந்தவர்களில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. ‘நிலவு மனிதன்’ என்று அழைக்கப்படும் மயில்சாமி அண்ணாதுரையின் திட்டத்தினால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் தான் நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து இந்தியா சாதனை படைத்தது.
சந்திரயான் 2 : வனிதா முத்தையா
அடுத்ததாக நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ மூலமாக சந்திரயான் 2 விண்கலம் கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி 95 சதவிகிதம் சென்ற சந்திரயான் 2 இறுதி நேரத்தில் தரையிறங்குவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தோல்வியடைந்தது.
உலகமே வியந்து பார்த்த சந்திரயான் 2 திட்டத்தை தயாரித்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா முத்தையா ஆவார். 2006 ஆம் ஆண்டு சிறந்த விஞ்ஞானி விருது பெற்ற வனிதா முத்தையா இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார். தரவுகளை கையாளுவதிலும் சிக்கல்களை கண்டறிந்து சீரமைப்பதிலும் வனிதா முத்தையா நிபுணத்துவம் பெற்றவராக திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சந்திரயான் 3 : வீரமுத்துவேல்
சந்திரயான் 2 திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த வனிதா முத்தையா வேறு துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். வீரமுத்துவேல் தலைமையிலான குழு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு வகையான ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பிறகு சந்திரயான் 3 விண்கலத்தை தயாரித்தது. குறிப்பாக சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட கோளாறுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தி சந்திரயான் 3 விண்கலம் தயார் செய்யப்பட்டது.
மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் குறித்தான ஆய்வில் ஆர்வம் கொண்ட வீரமுத்துவேலின் முழு ஈடுபாட்டில் சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணுக்குச் சென்ற சந்திரயான் 3 பல்வேறு கடினமான கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்து இன்று நிலவில் கால்பதிக்க தயாராக உள்ளது.
இந்தியாவின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றியதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. சந்திரயான் 3-ன் வெற்றி உலக அரங்கில் இந்தியாவை மட்டும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல், அதற்கு காரணமாக இருந்த தமிழர்களையும் அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதில் ஐயமில்லை. காத்திருப்போம்…. சந்திரயான் 3-ன் வெற்றிக்காக….